பாடசாலை (சிறுகதை)
{கடற்கரை சேரி வீடொன்றில் கணவன் இல்லாமல் மீன் தொழில் செய்யும் தாயும் அவளது மகன் மாறனும் வாழ்ந்துவருகிறனர்}
அம்மா நானும் எல்லோரையும் போல பாடசாலைக்கு போக வேண்டும்.
முடியாது மாறன்,.உன்னை பாடசாலையில் சேர்க்க மாட்டார்கள்.
ஏனம்மா இப்படிச் சொல்லுறீங்கள்.எல்லோரும் போகிறார்கள். நான் மட்டும் ஏன் போக முடியாது?
உன்னிடம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லை மகன். ஆகையால் பிறந்த தினம் இல்லை.எனக்கு தெரிந்து உனக்கு வயது எட்டு ஆகின்றது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் உன்னை பாடசாலையில் சேர்க்க மாட்டார்கள்.
நான் பாடசாலை போக வேண்டும்.என்னை எப்படியாவது பாடசாலையில் சேர்த்து விடுங்கள்.
( ஒரு வாரத்தின் பின் தாய் மகனை பாடசாலையில் சேர்ப்பதற்காக அழைத்துச் செல்கின்றார்.பாடசாலையில் காலைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.அதிபர் தனது பேச்சை முடித்துக் கொண்டு ஒரு மாணவனை பேச வருமாறு அழைக்கிறார்.எவரும் பேச முன் வரவில்லை.அடுத்த வாரம் தயார்ப்படுத்தி வருமாறு கூறி காலைக்கூட்டத்தை முடிக்கிறார்)
அதிபர் ஐயா!எனது மகனை பாடசாலையில் சேர்க்க வேண்டும்.
“பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் உங்களது மகனை பாடசாலையில் சேர்க்க முடியாது அம்மா” பாடசாலை அதிபர் பதில் சொல்கிறார்.
அதிபர் ஐயா! எனது மகன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.எப்படியாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.
என்னம்மா கதைக் கிறீங்கள்.பிறந்த திகதி தெரியாது.அப்பா யார் என்று தெரியாது.உங்கள் மகன் படித்து என்ன பண்ணப் போகின்றான்? இங்கே இவனுக்கு அனுமதி கிடையாது.நீங்கள் செல்லலாம்.
(சோகத்துடன் தாயும் மகனும் சேரிக்கு செல்கின்றனர்)
எனது அப்பா யார் அம்மா? மகன் மாறன் தாயிடம் ஆதங்கத்துடன் கேட்கின்றான்.
“இந்தக் கேள்வியைக் கேட்டு என்னைக் கொல்லாதே மகன். உனக்கு அம்மா, அப்பா எல்லாம் நான் தான் மாறன்” இவ்வாறு பதிலளிக்கிறார் தாய்.
(அடுத்த வாரம் பாடசாலையில் காலைக் கூட்டம் நடை பெறுகின்றது.மாறன் அந்தக் கூட்டத்தை பார்க்கும் ஆவலுடனும் எப்படியாவது பாடசாலையில் சேரும் தாகத்துடனும் இரவல் வாங்கிய பாடசாலை சீருடையில் செல்கிறான்)
“யாராவது பேச வாருங்கள்” அதிபர் அழைக்கிறார்.
“அதிபர் ஐயா! நான் பேசலாமா?” எவரும் முன் வராத நிலையில் மாறன் கேட்கிறான்.
‘நீ யாரப்பா?! உன்னைத் தான் பாடசாலையில் சேர முடியாது என்று கூறி விட்டேனே! பிறகு ஏன் வந்திருக்கின்றாய்?”
பாடசாலை அதிபர் கேட்கிறார்.
அதிபர் ஐயா!எனக்கும் ஒரு சந்தர்ப்பம் அளியுங்கள்.என்னிடம் திறமை இருக்கிறது.
“முடியாதப்பா! நீ செல்லலாம்”அதிபர் கூறுகின்றார்.
(அதிபரின் உத்தரவை மீறி பாடசாலைக் கூட்ட மேடையில் பேசுவதற்காக ஏறுகிறான்)
எனக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லை.ஆகையால் பிறந்த தினம் இல்லை.எனது அம்மா கூறுகின்றபடி எனது வயது எட்டு. எனக்கு பாடசாலையில் படிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஆனால் எனக்கு பாடசாலையொன்று இல்லை. ஆனாலும் நான் அறிந்துள்ள விடயங்களை எனது வயதுற்ற பாடசாலை செல்லும் மாணவர்கள் அறிவார்களா என்று சொல்லத் தெரியாது. பசியைப்பற்றிய கதையொன்றை அதிபர் ஐயாவுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.ஆகையால் மரத்தின் மேல் இருந்து கொண்டு கீச்சிடும் குருவியின் சத்தம் என எனது பேச்சை எண்ணி விடாதீர்கள்.எனது அப்பா யார் என்று எனக்குத் தெரியாது .அப்பா இல்லாத, அவர் யார் என்று தெரியாத வலியை சொல்ல முடியும். வீதியில் செல்லும் மனிதர்கள் கேலி செய்யும் போது எனக்கு இப்போது வெட்கம் வருவது இல்லை.
(இவனது பேச்சைக் கேட்ட மாணவர்கள் கை தட்டுகிறார்கள். அதிபர் குறுக்கிடுகிறார்)
உனக்குத் தான் அனுமதி கிடையாது என்று கூறி விட்டேனே. பிறகு ஏன் மேடையில் ஏறி பேசுகின்றாய்.
அதிபர் ஐயா! பூமியில் கிணறொன்றை தோண்டி உள்ளே இறங்கினால் தெரிவது கிணற்றின் சுவர் மட்டுமே.ஆகாயம் என்பது கிணற்றின் வாயிலுக்கு வெளியே தெரியும் நீலவண்ண படலமாகும்.ஆகையால் கிணற்றுக்குள் இருந்து சத்தமிடுவதை விட இவ்வாறான உயரமான இடத்தில இருந்து பேசுவதற்கு எனக்கு விருப்பம்.
“உனக்காக பாடசாலை சட்ட திட்டங்களை மாற்ற முடியாது.நீ வெளியேறலாம்” அதிபர் உத்தரவிடுகிறார்.
“அதிபர் ஐயா! எனக்கு படிக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. நான் பெரிய ஆளாக வர வேண்டும்.என் அம்மா படும் கஷ்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” மாறன் கெஞ்சுகிறான்.
“நீ செல்லலாம்” அதிபர் தடாலடியாக பதிலளிக்கிறார்.
பாடசாலை வாய்ப்புக் கிடைக்காத சோகத்தில் தனது சேரி அமைந்துள்ள கடற்கரைக்கு வருகிறான்.கடற்கரையை அழுத படி பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
கடல் அலைகள் அவனது காலை தொட்டுச் செல்கின்றன. அவனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிகின்றது.
“பாடசாலை என்பது கல்வி கற்றுக் கொடுக்கு இடமா? அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் என்னும் ஒற்றைக் கடதாசியை பரிசீலிக்கும் இடமா? பாடசாலைகளில் ஏன் திறமையைப் பார்ப்பதில்லை? திறமை இருந்தும் படிக்க ஆர்வம் இருந்தும் பாடசாலைகளில் சேர முடியாத மாணவர்கள் எத்தனை பேர்? சேரிப் புறத்தில் பிறந்த மாணவர்களை மட்டும் சட்டம் ஏன் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறது? அப்பா என்பவர் யார்? ” இப்படி ஆர்ப்பரிக்கும் கடலலை யிடம் கேள்விகளைக் கேட்டு கடலலையிடமே சங்கமித்தது அவனது கண்ணீர்.
“இவனது எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது?இவனது நடத்தைகளில் இனி என்ன மாற்றம் ஏற்படப் போகின்றது? இவனால் சமூகம் சந்திக்கும் பின்விளைவுகள் என்ன ?காலம் இனி பதில் சொல்லும்” இவ்வாறு, சங்கமித்த அவனது கண்ணீரிடம் ஆர்ப்பரித்தன கடலலைகள்.
****************************************************************










Colombo Time






SocialVibe